குறிப்பு:

சௌந்தர சுகன் 1987 முதல் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகிறது. சனவரி - 2011 இதழ் எண்:296

சௌந்தரசுகன் அச்சு இதழில் வெளியாகும் படைப்புகளில் சில, சௌந்தரசுகன் வலை இதழில் பதிவாகும். இவற்றை வாசித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். விரிவான விமர்சன மடல்களை சுகன் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புங்கள்.


Sunday, June 5, 2011

தலையங்கம் - சமச்சீர்கல்வி

சமச்சீர் கல்வியை மறுத்து முதல் அதிர்ச்சியை, நாட்டின் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய, வாக்களித்ததில் பெரும் பங்கு வகித்த ஏழைத்தமிழ் மக்களுக்கும், அவர் தம் குழந்தைகளுக்கும் தந்திருக்கிறது ஜெயலலிதா அரசு.


சமச்சீர் கல்வி தரமற்றக் கல்வி, எல்.கே.ஜி மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய கல்வியை முதல் வகுப்புக்கு கொடுக்கிறார்கள். பணக்காரர்களை ஏழைகளாக ஆக்கப் பார்க்கிறார்கள். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அரசுப் பள்ளிகளைப் போன்று தரம் குறைந்த கல்வியை தனியார் பள்ளிகளும் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட கல்வி, என்று கல்வி வியாபாரிகள் குதிக்கிறார்கள். தடை செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். 200 கோடி மக்கள் பணத்தில் அச்சடிக்கப்பட்ட நூல்களை குப்பையில் போட்டு விட்டு பழைய நூல்களை, பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைத்து அச்சடிக்க தொடங்கியிருக்கும் ஜெயலலிதா அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.


சமச்சீர்கல்வி நூல்களை தயாரித்தது கருணாநிதியோ அல்லது அவரது வாரிசுகளோ அல்லது தி.மு.க. கழக கண்மணிகளோ இல்லை. அதை தயாரித்தது கல்வியாளர்கள், அறிஞர்கள், தேர்ந்த ஆசிரியர்கள். அதற்காக பல திங்கள்கள் உழைத்து உண்ணாமல், உறங்காமல் அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்து தயாரித்திருக்கிறார்கள். குறைகள் இருக்கலாம் அவற்றை களையலாம். கருணாநிதியே சொல்வது போல அவரது செம்மொழிப்பாடல்தான் உறுத்துகிறது என்றால் அதை நீக்கிவிடலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் தவறுகளை திருத்தி, திருத்தியப் பதிப்புகளை வெளியிடலாம்.


ஆட்டம் என்ற சொல்லுக்குப் பொருள் இதற்கு மேல் பிளக்க முடியாது என்பதுதான். இது அணுவைப் பற்றிய ஆரம்ப காலகட்டங்களில் வைத்தப் பெயர். ஆய்வு செய்து வளர வளர அணுவைப் பிளந்து சாதனை செய்தார்கள். என்றாலும் இப்போதும் அதன் பெயர் ஆட்டம் தான். இது போன்றுதான் இத்தகைய முயற்சிகளும். சமச்சீர் கல்வி என்பது தேர்ந்த கல்வி வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கானது. நீண்ட நாள் கனவு. அதை தனது அதிகார மனப்பாங்கால் ஒரு உத்தரவில் குப்பைக்கு அனுப்பும் ஜெயலலிதாவின் அரசு வருகிற ஐந்தாண்டுகளில் என்னஎன்னவெல்லாமோ செய்யப் போகிறதோ என்கிற அச்சத்தை கிளப்பியிருக்கிறது என்பதை முதலில் ஜெயலலிதா உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் கட்டாயம் தேர்த்ல் வரும்... மக்களின் கையில் வாக்குரிமை தீர்ப்பை எழுத தயாராய் இருக்கும்.

No comments:

Post a Comment