கோடுகளால் செய்யப்பட்ட
இதயச் சுவர்களுக்குள்
குருதியின் நிறம்
இருளாக இருந்தது
கொஞ்சம் கோடுகளை
இரவலாக கேட்டேன்
சில ஓவியங்களாக
மாற்றி விடலாமே என்று
உரிமை உடையவன்
முறைத்துப் பார்த்தான்
கண்களிலும் கூடக்
காணவில்லை கருநீலத்தை
போவென அதட்டிய
விரலிடுக்குகள் முழுவதிலும்
அங்கங்கே
முளைத்திருந்தன முட்புதர்கள்
கற்பனை என்றுதான்
முதலில் நினைத்தேன்-அவன்
கடித்துத் துப்பிய
வார்த்தைகளின் எச்சில்
முனைகளிலிருந்து
வரிசையாய் உதிர்ந்தன
சிறுசிறு கூர் முட்கள்
வருத்தமாய் இருந்தாலும்
ஓவியக்கோடுகளை
வாங்க முடியவில்லை
என்றாலும் கொப்பளித்தது
இரக்கம்
இவன் போலவே இன்றைய
உலகமும்
மெதுமெதுவாய் மாறுவது
குறித்து!
-அனலேந்தி
No comments:
Post a Comment